ஆசிரியர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 94
விலை : ரூ. 70
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்
எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் மீதும் கொண்டு விடுவதில்லை நாம். நம் சுய நலக் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே அன்னிய மனிதர்களது இருப்பு அவசியமாகிறது நமக்கு. வண்ணநிலவனின் எழுத்தை வாசிக்கும் போது அண்டை மனிதர்களை நேசிக்கத் தவறும் குற்ற உணர்ச்சி இயல்பாகவே நம்முள் எழுகிறது.

