Monday, June 20, 2011

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 1




பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 1
பரிந்துரை: சண்முகம்


ஆரியர்களின் வரவு - ஆரிய சமூகம் - யாகபலிகள் - புத்தர் வருகை - மனுஸ்மிருதி - சதுர்வர்ண முறை - சாதிச்சமூகம் - சாதியும் தேசமும் - இந்தியாவில் விஞ்ஞானம் - படிப்படியான சமத்துவமின்மை - பௌத்தத்தின் வீழ்ச்சியும் நலிவும் - இந்து சமய இலக்கியங்கள் - பகவத்கீதை - பெண்களின் நிலை


 அம்பேத்கர் பல கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகை நூல் இது. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவராகிய அம்பேத்கர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட. பண்டைய இந்தியா குறித்த அவரது ஆய்வுகளும் கருத்துக்களும் இந்திய சமூக வரலாற்றைத தெரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதது.

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 2




பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 2
பரிந்துரை: சண்முகம்


இப்பொழுது இந்து சமய இலக்கியங்களைப் பற்றிப பார்ப்போம்.

பல நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியில், இராமாயணம் மூன்று பதிப்புகளாக வந்திருக்கிறது. முதல் பதிப்பில், ஒரு வரலாற்றுக் கதையாக - இராமனின் மனைவி சீதையை அபகரித்துச் சென்ற இராவணனுடன் இராமன் புரிந்த போர், என்ற சிறு கதையாக மட்டுமே இருந்தது. இரண்டாவது பதிப்பில், கதையுடன், சமூகம் நீதி சமயம் தொடர்பாக மக்கள் ஆற்ற வேண்டிய போதனை நூலாகப் பரிணமித்தது. மூன்றாவது பதிப்பில், மேலும் தொல்கதைகள், தத்துவங்கள், அறிவு, கல்வி, அறிவியல்கள் ஆகிய அனைத்தும் கொண்ட கருவூலமாக முற்று பெற்றது.

Thursday, June 16, 2011

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்




உயிர்த்தண்ணீர்
ஆசிரியர்: கண்மணி குணசேகரன்பரிந்துரை: சண்முகம்

பீக்காட்டுல தொடச்சிப் போட்ட கல்லு மாதிரி, சமுதாயத்தில தொடச்சிப் போட்ட சனங்களை, நம்ப கண் முன்னாடி வரையாரு கண்மணி குணசேகரன். (என்னமா நல்ல பேரு வச்சிருக்காரு ! ). நடுநாடுன்னு சொல்றாங்களே - அதாவது நெய்வேலி, கடலூர், பண்ருட்டின்னு - இப்படி இங்கிருந்து யாரோ ஒரு நல்ல கதை சொல்றவரு கதையை நேர்ல சொன்னா எப்படி இருக்குமோ, அப்படியே எழுத்துல சொல்லியிருக்காரு கண்மணி. இந்தக் கொச்சையான வட்டார சொல்நடை, மொத கொஞ்சம் கடுப்பாத் தான் இருந்துச்சி. ஆனா போகப்போக ருசிக்க ஆரம்பிச்சிருச்சி. (கி.ரா, இது தான் நெசமான மக்கள் தமிளு, நாம சாதரணமா படிக்கிறதெல்லாம் மொண்ணெத் தமிளும்பாரு. )

Wednesday, June 8, 2011

பண்டைய இந்தியா : பாகம் 5




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 5







நிலப்பிரபுத்துவத்தின் வாசலில்

மகதப் பேரரசு ஒரு சில நூற்றாண்டுகளிலேயே மிக விரைவாக எழுந்தது.  அசோகரின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது.  மகதப் பேரரசு பின் பற்றிய அரசியல் கொள்கைகள் ஆட்சி நீடித்து நிலைப்பதற்கான வழியை  வகுத்தது.  அசோகரின் ஆட்சியில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு, அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்தது.   அந்தச் சீரழிவின் முடிவில் இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்தின் விதைகள் விதைக்கப்பட்டு முளை விடத் துவங்கின என்கிறார் கோசாம்பி.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் சாரத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம்.  இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் தற்கால இந்தியாவில் காணலாம்.  குறிப்பாக முன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் கோசாம்பி.   அவை: 1 இந்தியாவை கட்டமைத்ததில் சமயத்தின் பங்கு; 2 . நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கம்; 3. பக்தியும் விசுவாசமும். இவற்றை விரிவாகக் காண்போம்:

1 . இந்தியாவைக் கட்டமைத்ததில் புரோகிதத்தின் பங்கு

இக்காலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி, பலிகளையும், சடங்குகளையும் போற்றி வளர்த்து வந்த பழைய பிராமண வாழ்க்கை முறையை முற்றிலும் வலுவிழக்க வைத்து விட்டது.  இருப்பினும், பழங்குடிகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த, பிறப்பு, இறப்பு, அறுவடை, திருமணம் போன்ற நிகழ்சிகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.   சடங்குகளை வெறுத்த பெளத்தர்களோ, ஆசிவர்களோ இந்த வேலைகளை செய்ய முனையவில்லை.  இந்த வேலைகளை சடங்குகளில் மிகவும் பரிச்சயம் இருந்த புரோகிதர்கள் ஆர்வத்துடன் எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.