Showing posts with label yaamam. Show all posts
Showing posts with label yaamam. Show all posts

Saturday, July 24, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்

நாவல்      : யாமம்
ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்.

உயிர்மை வெளியீடாக வந்திருக்கும்  எஸ். ராமகிருஷ்ணனின்  நாவலான 'யாமம்' சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின்  அவ்வீட்டின்  விளக்குகளின்  சுடர்கள்  அனைத்தும்  ஒன்று  கூடி  அம்மனிதர்களின் குண  இயல்புகளையும்,  ஆசைகளையும்  ஏக்கங்களையும்  பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று   நாவலின்  முன்னுரையில்   எஸ்.ரா.  குறிப்பிடுகின்றார்.  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரமாவதுப் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது.  யாமம் என்பது ஒருவகை  அத்தரின் பெயர்.  எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும், காமத்தைத் தூண்டும் வல்லமை கொண்டது யாமம்.  நாவலின் பெயர்தான் யாமமே தவிர, இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல.