Thursday, October 3, 2013

ஞானமடைதல் என்ற புதிர் – பாகம் 2

ஞானமடைதல்   என்ற   புதிர்

யு ஜி கிருஷ்ணமூர்த்தி
கண்ணதாசன் பதிப்பகம்
விலை:  80 ரூபாய்

முந்தைய பதிவில்,  ஜே கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டோம்.

இப்போது  யு ஜி கிருஷ்ணமூர்த்திக்கு வருவோம்.






யு ஜி கிருஷ்ணமூர்த்தியின்  வாழ்க்கைத்  தரிசனம்:

சுருக்கமாய்,   யுஜி - ஞானமடைதல்,   பேரானந்தம்,   சுயத்தை அறிதல் -  என போதிக்கும் சகல தத்துவங்களையும்,   அவற்றை போதிக்கும் குருமார்களையும் நிராகரித்தார். குறிப்பாக, ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்.



வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்பது வெளிப்படை.  வாழ்க்கை என்பது (சிந்தனைகளின் அதீத குறுக்கீடுகள் இல்லாமல்) இயல்பாய் வாழ்வதற்கே  படைக்கப்பட்டிருக்கிறது.  வாழ்வின் அர்த்தம்,  கடவுளின் இருப்பு (அல்லது இருப்பின்மை), கர்மா, மறுபிறப்பு, அவதாரம் – குறித்த கேள்விகள், சிந்தனைகள் அர்த்தமற்றவை; பதில் இல்லாதவை   என்றார் யுஜி.

யு ஜி கிருஷ்ணமூர்த்தி
மேலும்  யுஜி:

"... யாரோ சொல்வதை தொடர்ந்து கேட்கிறீர்கள்.   உங்கள் பெற்றோர்கள் கூறுவதை,   பள்ளியில் ஆசிரியர்கள் கூறுவதை,   நல்லவனாக,  கடமை உணர்வோடு கோபம் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை எல்லாம் கேட்கிறீர்கள்.   எப்படியோ, நாளையோ மறுநாளையோ இன்னும் இன்னும் கேட்பதால்,   இநத விளையாட்டிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.  ஆனால் இந்தக் கேள்வி ஞானம் எந்த நன்மையும் செய்வதில்லை.   பிறகு எப்படி யோகா செய்வது என்று கற்கிறீர்கள்.    பிறகு ஒரு தாத்தா வந்து தேர்வற்ற உண்ர்வு நிலையை அடைவது பற்றி போதிக்கிறார். அல்லது ஆன்மிக வியாபாரம் செய்யும் யாரையாவது கண்டு பிடிக்கிறீர்கள்..."

(மேலே யுஜி,  ‘தாத்தா’  என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. )


யுஜி,   எண்ணங்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.   எண்ணங்கள் இரண்டு வகை என்கிறார்.    உணவைத் தேட,   பொருளீட்ட,   அலுவல்கள், ஆராய்ச்சி செய்ய,   என உயிர் வாழத் தேவையான எண்ணங்கள் அவசியமானது,   இவை பிரச்சனையல்ல.


இரண்டாவது வகையான எண்ணங்களைப் பார்ப்போம்.    சுயத்தை அறிய, உண்மையைத் தேட,   பேரானந்தத்தை அடைய,   வாழ்க்கையின் அர்த்தத்தை உணர,   நிம்மதியைத் தேட என்ற இது போன்ற எண்ணங்கள் தான் பிரச்சனையே என்கிறார்.


முதலில், இந்த மாதிரியான எண்ணங்கள் உங்களுடைய சொந்த எண்ணங்களே இல்லை என்கிறார். உங்கள் பெற்றோர்கள்,  ஆசிரியர்கள்,  மகான்கள்,  உங்களுக்கு முன் வாழ்ந்த ஞானிகளின் எண்ணங்கள் தான் உங்களுக்குப் படிப்படியாய் ஊட்டப்பட்டு அல்லது நீங்களே அதை உள்வாங்கி, உங்களுடையதாக ஆக்கிக் கொண்டு விட்டீர்கள் என்கிறார் யுஜி. நீங்கள் இந்த எண்ணங்களுக்கு எதிர் எண்ணங்களை உருவாக்கி, அவற்றை உங்களுடைய எண்ணங்கள் தான் என்று நினைத்துக்கொண்டிருக்கலாம்.  ஆனால் இவையாவும் கடன் வாங்கப்பட்ட அல்லது அதற்கு எதிர்வினை புரிந்த எண்ணங்களே.  சரி,  இந்த வகை எண்ணங்கள் உருவாவது எப்படி ?


‘நான்’  என்ற பிரக்ஞை உங்களுக்குச் சிறுவயதிலிருந்து உருவாகிறது.   உங்கள் பெயர், இன்னார்   உங்கள் பெற்றோர் –  இதுவல்ல பிரச்சனை.  அதற்கு மேல்,   நீங்கள் உங்களைப் பற்றிப் படிப்படியாக கட்டமைக்கும் பிம்பங்கள் தான் பிரச்சனையே. உதாரணத்திற்கு,   நீங்கள் கணிதத்தில் விற்பன்னராக இருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.    உங்களுக்கு கணிதத்தில் திறமை இருக்கிறது என்ற பிரக்ஞை ஒரு உண்மையே.   அதில் பிரச்சனை இல்லை.    ஆனால்,   இத்திறமை இருப்பதனால்,  நீங்கள் மற்றவரைவிட ‘மேம்பட்டவர்’,   ‘விஷேசமாக கவனிக்கப்பட வேண்டியவர்’  என்ற எண்ணம் உங்கள் ‘நான்’  ஆக உருவெடுக்கிறது.    முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது –   நீங்கள் இப்போது உருவாக்கிய ‘நான்’   ஒரு செயற்கையான, உள்ளீடற்ற பிம்பமே.   இதை உருவாக்கிய பின்னர்,   உங்கள் வாழ்நாள் முழுவதும் சாகும்வரை   இதைத் தூக்கிச் சுமந்து திரிகிறீர்கள்.   இது மட்டுமா?   இந்த ‘நான்’   உடன் –   மெத்தப் படித்தவர்,   அழகான துணையை உடையவர்,   இநதச் சாதியைச் சேர்ந்தவர்,   பல நாடுகளுக்குச் சென்றவர், அடக்கமானவர், பண்பாளர், தியானம் செய்பவர்,   ஏக நண்பர்களை உடையவர் –  போன்ற பல அடுக்குகள் கொண்ட ‘நான்’-ஆக ஊதிப் பெருக்குகிறீர்கள்.  நாம் இயற்கையாய்,   இயல்பாய் எதுவாக இருநதிருப்போமோ,   அதை   இந்த ராட்சச விருட்சமான ‘நான்’   மூடி மறைக்கிறது,   நாம் நம்மையே இழக்கிறோம்.


நாம் எதையாவது சாதிக்கும்போதோ, வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைக்கும்போதோ ‘நான்’  நமக்கு மகிழ்ச்சியை அளித்தாலும்,   அது சொற்ப காலமே நீடிக்கின்றது.  நாம் எந்த அளவுக்கு ‘நான்’ என்ற பிம்பத்தை ஊதி வளர்த்து இருக்கிறோமோ அந்த அளவிற்கு நமது எண்ணவோட்டங்கள் நம்மை அழுத்துகிறது.  மிகுந்த மனசஞ்சலங்களுக்கும் சோர்வுக்கும் உள்ளாகிறோம்.  ‘நான்’ நமக்கு நிம்மதியை, மகிழ்ச்சியைத் தருவதாயில்லை. இப்போது நாம் ஆன்மீகத்துக்குத் திரும்புகிறோம். அதற்கு வெளியிலிருந்து உதவி கோருகிறோம்.


நிம்மதியோ,   ஞானமோ வேண்டி,   புத்தர், ரமணர், ஞானமடைந்தவர் என நாம் கருதும் மற்றவரிடத்தில் தஞ்சமடைகிறோம். மற்றவர் கேட்ட கேள்விகள் இப்போது நம்முடைய கேள்விகள்.   மற்றவர் சொன்ன பதில்களையும் அதை அடையும் முறைகளையும் பின்பற்றுகிறோம். ஞானமடைந்த நிலைக்காக -  நிம்மதிக்காக தீவிரமாகத் தேடுகிறோம்.   


மேற்கூறியது வரை,   ஜே கிருஷ்ணமூர்த்திக்கும் இதில் கருத்துவேறுபாடு கிடையாது.


இருவருக்கும் உள்ள வேறுபாடு:

 ஜேகே,   கட்டற்று திரியும் மனம்,   மற்றும் அதை விழிப்புணர்வுடன் கண்காணிக்கும் மனம் என மனதை இரண்டாகப் பகுப்பதை,  யுஜி எதிர்த்தார்: இநதப் பாகுபாடு செயற்கையானது என்றார் யுஜி.   கண்காணிக்கும் மனமும் ‘நான்’   என்பதன் நீட்சி தான் என்றார்.


முன்பிருந்த ‘நான் நல்லவனாக இருக்க வேண்டும்’   என்ற செயற்கையான உறுதிப்பாட்டை இப்பொழுது ‘நான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்’ என்ற இன்னொரு செயற்கையான் உறுதிப்பாடு எடுத்துக்கொண்டது.   இரண்டிலுமே அதே ‘நான்’  தான் நீடிக்கிறது.   நீ பொறாமைப்பட்டுக் கொண்டே, ‘ஆம் நான் பொறாமையுணர்வுடன் இருக்கிறேன்.  அதை நான் விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன்’  என்ற விளையாட்டை எப்போதும் விளையாடிக் கொண்டேதான் இருக்கப் போகிறாய்; உன் பொறாமையுணர்வும் களையப் போவதில்லை, அதைக் கண்காணிப்பதையும் நீ நிறுத்தப் போவதில்லை,   என்றார் யுஜி.  நம் மனதில் தோன்றும் எண்ணங்களை, மனதின் செயல்பாட்டைக் கொண்டே  என்றும் ஒழிக்கமுடியாது    என்றார்.


யுஜி,  அடிப்படையாக சொல்லவருவது,   மற்றவர்களுடைய கேள்விகளோ,  பதில்களோ,   வழிமுறைகளோ  என்றைக்கும் உங்களுடையது அல்ல.  அவை என்றைக்கும் நமக்கு உதவப்போவதில்லை.  (அவை எவ்வளவு நல்லெண்ணத்துடன் சொல்லப் பட்டிருந்தாலும் கூட).   நாம் மிக மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது: வெளியிலிருந்து யாரும்,   அல்லது எதுவும் நமக்கு உதவப் போவதில்லை என்பதே.


ஏன் ?    இன்னொருவர் கேள்வியோ பதிலோ அவரவருடைய தனிப்பட்ட பின்னணி,  சூழல் சார்ந்தது.    தனித்தன்மை வாய்ந்தது.   (புத்தரின் பின்னணி – சூழல், ‘மோட்சம்’  என்று ஒன்று உள்ளதா என அவரைத் தேட வைத்தது;   ரமணரை ‘நான் யார் ?’  என்ற கேள்வியோடு அவர் தேடலைத் துவக்கி வைத்தது).   மற்றவர் கேட்ட கேள்விகளை உங்கள் கேள்விகளாக நீங்கள் சுவீகரித்துக் கொள்ளலாம்,  ஆனால் உங்களுள் எந்த மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை.  


வெளியிலிருந்து  நமக்கு எந்த உதவியும் இல்லையென்றால், அடுத்த கட்டமாய் நாம் நம்மையே சார்ந்து,  நம்முள்ளேயே  பதிலைத்  தேடுகிறோம்.  நாம்  நம்முடைய சுயமான கேள்வியை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.  அக்கேள்விகளுக்கான பதிலை,   மிக உக்கிரமாக, நம் வாழ்க்கையையே அர்ப்பணிக்கும்படி தேடுவது அவசியம். உக்கிரமாய்த் தேடி, பாதையை வகுத்துக்கொண்ட எத்தனையோ ஞானிகளை நாம் அறிந்ததில்லையா என்ன ?  நாம் உக்கிரமாகத தேடினால் பாதை தென்படாதா என்ன ? 


இங்கு யுஜி, மற்றொரு குண்டைப் போடுகிறார்.  பாதையைத் தேடுவதில்,  ‘உங்களுக்கு நீங்களே கூட உதவ முடியாது !’ என்கிறார்.  ஏன் ?


பாதை என ஒன்று இல்லவே இல்லை. நாம் நமது கற்பனையில் மட்டுமே இருக்கும்,   ஆனால் உண்மையில் இல்லாத ஒரு நிலைக்காக, பதிலே இல்லாத கேள்விகளுக்காக, அடையவே முடியாத நித்ய ஆனந்தத்திற்காக, நேரத்தையும் சக்தியையும் வீணாக்குகிறோம்

.
கேள்வி கேட்டவர்கள் யாவரும் பதில் என்று ஒன்று இல்லவே இல்லை என்று கண்டு கொண்டதே பதிலாகும்.   அவர்கள் தேடித் தேடிச் சலித்து, சோர்வுற்று, முற்றிலும் சரணாகதியடைந்து, இனி தேடுதலால் எந்தப் பயனும் இல்லை என்று தேடலைக் கைவிட்ட பின்னரே,  தேடுதல் அவசியமே இல்லை என உணர்ந்தனர்;   இதைத் தான் ஞானமடைதல் என்றும் கூறிக்கொண்டனர். சுருக்கமாய், தேடுதலைத் துறப்பதினால் கிடைப்பது  எதுவோ,   கேள்விகள் மறைந்து போனதினால்  கிடைக்கும் பதில் எதுவோ – அதுவே நிதர்சனம்.
வெளியிலிருந்தோ அல்லது உள்ளேயிருந்தோ உங்கள் கேள்விகளுக்கும் தேடல்களுக்கும் பதிலே இல்லை என்று தெளிந்தபின் கேள்விகள் தானாய் மறைந்து நீங்கள் உங்கள் இயல்பான நிலைக்குத் திரும்புதலே, ஞானமடைதல்.


மேலும் யுஜி,

“உன்னைச் சந்தோஷமில்லாமல் செய்வது இல்லாத ஒரு பொருளைத் தேடுவது தான். ஞானமடைய முயல்வதை நிறுத்துவது தான் ஞானமடைதல்.  அமைதியை உண்டாக்க நீங்கள் முயல்வது தான் தொந்தரவுகளை உண்டாக்குகிறது.”


சரி,   இந்த இயல்பான நிலையில மனிதன் எப்படி இருப்பான் ?   எங்ஙனம் நடந்து கொள்வான் ?


எண்ணங்களின் தடை இல்லாத போது,   புலன்கள் உணரும் நிலை தான் இது. எண்ணங்களின் இடையூறின்றி புலன்கள் இயல்பான லயத்தில் (அல்லது உச்ச நிலையில்)   செயல்பட ஆரம்பிக்கின்றன.    எண்ணம் தானாக இங்கு உருவாவதில்லை.  எண்ணம் தேவையின் அடிப்படையில் தான் வருகிறது. எண்ணத்தொடர்ச்சி நின்று,  விடுபட்டுப் போகிறது.
  
(நம்மில் பெரும்பான்மையோர், வயது கூட கூட, எண்ணங்களிலேயே வாழ்கிறோம். ஒரு கோப்பை தேநீர் அருந்தும் போதுகூட, ஒரு சில உறிஞ்சல்கள் அல்லது க்ஷண நேரமே அதன் சுவையை உணர்கிறோம்.  மற்றபடி பெரும்பாலும் வழக்கப்படி நம் எண்ணங்களில் கரைந்து போகிறோம்.)


இயல்பான நிலையில் இவ்வகை எண்ணங்கள் இல்லை. நீங்கள் சும்மா இருந்தாலும், ‘போரடிக்கிறது’ என்ற எண்ணம் அங்கில்லை.  அதனால் நீங்கள் கிளர்ச்சியைத் தேடி ஓடுவதுமில்லை.  நீங்கள் வெறுமனே உட்கார்ந்திருப்பது தடையின்றி உங்களால் ஏற்றுக்கொள்ளப் படுகிறது.  இதைத்தான் யுஜி:

‘நீங்கள் செய்வதைவிட அதிக ஆர்வமாக ஒன்று இருப்பதாக நினைக்கிறீர்கள். அது விலகி விட்டால்,   நீங்கள் செய்வது மிக மிக சுவையாகி விடுகிறது.”


இந்த இயல்பான நிலை,   தன்னை உணர்ந்தவனின்,   கடவுளை உணர்ந்தவனின் நிலையல்ல.    இதில் ஆன்மிகமானது,   புலன் கடந்தது என்று எதுவும்   இல்லை.  இது நமக்குள் எபபோதும் இருக்கும் அமைதியான நிலை தான். (இதை நாம் சிறுவயதிலேயே மூடிப் புதைத்துவிட்டோம்).  இந்த நிலைக்கு வந்துவிட்டால், இயற்கையை, கதிரவன் உதயமாவதை – மறைவதை   கட்டாயம் ரசிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.   ரசிக்கலாம்,  ரசிக்காமலும் போகலாம்.  அபார ஆற்றலுள்ள பேரறிஞனாக ஒருவன் மாறுவதில்லை.  நம் குணங்கள் மாறுவதில்லை.  குறைகள், முட்டாள்தனங்கள் உண்டு.  கோபம் போன்ற சுபாவங்களிலிருந்து   நாம் விடுபட்டுவிடுவோம்  என்று எதிர்பார்க்க வேண்டாம். ஆன்மிக அடக்கத்தை எதிர்பார்க்க  வேண்டாம்.  கருணையுள்ளம் கொண்டவன் என எதிர்பார்க்க வேண்டாம்.    கோபம்,  ஆசை,  காமம் ஆகியவை வாழ்வின் சக்தி நிலைகள்; வாழ்விற்கு அவசியமானவை.   அநாவசிய எண்ணங்களின் குறுக்கீடு இல்லாத போது,  அவற்றுக்கே உரிய ஒரு கட்டுப்பாடுடன் அவை இயற்கையான லயத்தில்  செயல்படுகின்றன.

இந்நிலையை அடைபவர்கள் தனித்தன்மையோடு தன் காலத்திற்குப் பொருத்தமாய்  தங்களை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்.   ஒரே சமயத்தில் பலர் இருப்பின், தங்களுக்குள் ஒத்துப் போக வேண்டிய அவசியமும் இல்லை;   ஞானமடைந்தவர்கள் நாங்கள் என கைகோர்த்து ஆடவும் செய்வதில்லை.
 

நம்மில் சிலர், ‘யுஜி என்னத்தை சொல்லிவிட்டார் ? எவன் சொல்றதையும் கேட்காதே. நீ உன் வேலையைப் பார்த்துக்கிட்டு, சம்பாரிச்சிக்கிட்டு இருன்னு  நானும்  இதையேதான் அப்ப இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன்’ – என யுஜியை, லௌகீக நடைமுறை வாதம் பயிலும் ஒரு சமர்த்தராகச் சுருக்கிவிடக்கூடும்.  ஆனால் யுஜி சொல்லவருவது  ஆழமானது, நமது சிந்தனையின் எல்லைகளை சுட்டிக்காட்ட வல்லது.  யுஜியின் தத்துவத்தை,  ஞானம் வேண்டி சிரத்தையாக தேடுபவர்களுக்குப் பொருத்திப் பார்ப்பதே அர்த்தம் தருவதாகும்.


மேலும்,  கட்டுப்பாடின்றி எதையும் செய்யலாம் என்று அர்த்தமில்லை.  உணவு, உடை,  உறைவிடம் – இவை வாழ்வின் அவசியங்கள்.  இத்தேவைகளை நிராகரிப்பது ஆன்மிகமல்ல.  இத்தேவைகளை மீறி நாம் இன்னும்   வேண்டுவது  மனதின்  வக்கிரமான  நிலையே  என்கிறார்  யுஜி.


இயற்கையின் பரிமாணத்தால் தனித்தன்மையோடு மலர்ந்திருக்க வேண்டிய மனிதனை கலாச்சாரமே தடுத்தது என்கிறார் யுஜி.  கலாச்சாரத்தின் விளைபொருள் தான் ஆன்மிகம்.  ஆன்மிகம் ‘உதாரண மனிதனை’ உருவாக்கி, தனித்தன்மையை ஒடுக்கியது.


ஜேகே,   யுஜி  இருவரும் அதே உண்மையைத் தான் சொன்னார்கள்.   ஆனால், அதைச் சொன்ன விதம் வேறு என்று கூறுபவர்கள் உண்டு.  ஜேகே, ‘யாரையும் பின்பற்றாதே, (நான் உட்பட). உண்மையை நீயே,   உன்னுள் ஒளியாக இருந்து தேடு’ என்றார்.  இதையே தான் யுஜியும் சொன்னார் என்று சொல்லலாம். ஆனால்,   அதற்கு யுஜி,   யாரையும் பின்பற்றக்கூடாது என்று ஜேகே கூறினாலும்,   அவர் காட்டிய சார்பற்ற விழிப்புணர்வுப் பாதையைத் தான் மற்றவர்களுக்கு விட்டுச் சென்றார், என்கிறார்.


இதையே யுஜி,

“எதிர்மறை அணுகுமுறையை அவசியம் பயன்படுத்த வேண்டும்.  (மற்றவர் எவரையும் பின்பற்றாது இருத்தல்).  ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எதிர்மறை அணுகுமுறையை நீங்கள் நேர்மறை அணுகுமுறையாக மாற்றிவிட்டீர்கள். (யாரையும் பின்பற்றாதே என்று சொன்னவரையே பின்பற்றுதல்).  அவர் (ஜேகே) அதற்கு காரணமல்ல.   இந்த அமைப்பு எதைத் தொட்டாலும் அது நேர்மறையாகி விடும்...”


ஆனால் யுஜி,  ஞானம் வேண்டி தனனை நாடி வந்தவர்களிடம் திரும்பத் திரும்ப சொன்னது: 

கேள்வி கேட்பதை நிறுத்து.  யாராலும்  உனக்கு உதவ முடியாது.  உன்னாலும் யவரிடமிருந்தும் எதுவும் பெற முடியாது.  நீ இதை சீக்கிரம் உணர்ந்தால் நல்லது. நாற்பது, ஐம்பது வருடம் என்று ஞானத்தைத் தேடி, பின்னர் இவ்வளவு காலம் தேடியதெல்லாம் வீண்தானா என உன்னையே கேட்கும் நிலைக்கு ஆளாகாதே.


ஜேகே நேர்மையானவர் என்பதில் எந்தக் கருத்துவேறுபாடும் இல்லை.  ஜேகே ஞானமடைந்தவராக இருக்கலாம்.  ஆனால் அவருடைய பாதையைப் பின்பற்றியவர்களுக்கு உதவியதா என்பதே கேள்வி. சிலர் உண்மையை உணர்ந்திருக்கலாம். ஆனால் அது அரிதிலும் அரிதாகவே இருக்க முடியும்.


ஓரிரு வரிகளில் யுஜி நமக்கு சொல்வது:   நம்மால் செய்ய முடிந்தது நாம் நாமாகவே மட்டும் இருப்பது தான்.    நாம் எங்கும் போக விரும்பாவிட்டால்,   பாதையை நாம் ஏன் தேட வேண்டும் ?


தத்துவ உலகில், இது தான் முடிவானது என்று எதுவுமில்லை.  இது யுஜி-க்கும் பொருந்தும்.  இப்பதிவின் பொருட்டு,  ஜே கிருஷ்ணமூர்த்தி மற்றும் யுஜி கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்கள் எளிமைப்படுத்தப் பட்டிருப்பது தவிர்க்கமுடியாதது.  ஆனால் இவ்விருவரது தத்துவங்களின் முழுமையான சாரத்தை அறிந்துகொள்ள இவர்களுடைய நூல்களை ஆழ்ந்து படிப்பது மிக அவசியம்.  ‘ஞானமடைதல் என்ற புதிர்’ – யு ஜி கிருஷ்ணமூர்த்தியின்  வாழ்க்கைத்தரிசனத்தை,  நேர்காணல்கள் மற்றும் குறிப்புகள் வாயிலாக,  செம்மையாக மொழிபெயர்க்கப்பட்ட நூல். 


நீங்கள் உண்மையை தேடுபவராயிருந்தாலும்  சரி,    உண்மையைத் தேடி சலிப்படைந்தவராய் இருந்தாலும் சரி,    இந்தப் புத்தகத்தில் யுஜி சொல்வது உங்களை நிலைகுலைய வைக்கலாம்.   உங்கள் தேடலில்,    நீங்கள் தனித்து விடப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளது.

4 comments:

G.Venugopalan said...

முதற்கண் மன்னிப்புக்கோரல்

இந்தப்பதிவின் இறுதியிலிருந்து இரண்டாவது (penultimate) பத்தியில் மிக தெளிவாக கூறப்பட்டுள்ளது. "மேலும் தெரிய மூலத்தை படியுங்கள்.". நான் இதனை இன்னும் நிறைய எடுத்து முதல் பதிவின் கருத்தில் கூறவேண்டியிருக்கவில்லை.

UGK பற்றி கீழே கொடுத்துள்ள வலைத்தளங்கள் பார்க்க பரிந்துரைக்கப்படுகிறது.

http://ugkrishnamurti.net/ugkrishnamurti-net/SWAN_SONG.htm
http://www.metacafe.com/watch/622628/u_g_krishnamurti_swan_song/

வேணுகோபாலன்

CRKannan said...

First, I ilke to thank my friend Shanmugam for introducing me to this blog.

I didn’t get a chance to read more on JK and UGK. But from the review I could get some of their thoughts, views & we can name it as philosophy etc…

After going thro the review, What I came to know (limited) was, everybody is different and so their thoughts are. So how it could fit everyone at all circumstances…. But we have to live with it and keep moving.

Regards
CRKannan

balamurali47 said...

யுஜிசி பற்றி நீங்கள் குறிப்பிட்ட அந்த கடைசி பாரா முழு உண்மை. யுஜிசி படிக்கும் எவரும் படிப்பதற்கு முன் இருந்த நபராக உறுதியாக இருக்க மாட்டார். நீங்கள் குறிப்பிட்டது போல உண்மை என்ற ஒன்றை உண்மையான அக்கறையோடு தேடி சலித்து போனவர்களுக்கு யுஜி செய்யும் உதவி இவ்வுலகில் வாழ்ந்த எவரும் செய்ய முடியாதது. தங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள்.

sammuvam said...

பாலமுரளி,

தேடிச் சலித்து விட்டோம் என்று விடுவது அத்தனை எளிதாக முடிகிறதா என்ன? தேடிக் கண்டடைய முடியாததை தேடித் தான் கண்டடைய வேண்டும் என்பது எத்தகைய முரண் ?! தங்கள் விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

Post a Comment